*தீபங்களை ஏற்றிடுவோமே சாய்
எங்கள் பாவங்களை நீக்கிடுவாயே நீ!
*உந்தன் லீலைகளை பாடிடுவோமே சாய்
எங்களை திருவடிகளில் சேர்த்திடுவாயே நீ!
*பொறுமையுடன் காத்திருப்போமே சாய்
எங்கள் நம்பிக்கைதனை வளர்த்திடுவாயே நீ!
*காணும் உயிர்களில் உனை காண்போமே சாய்
எங்களை எத்திசையிலிருந்தும் கண்டிடுவாயே நீ!
*தான தர்மங்கள் வழங்கிடுவோமே சாய்
எங்கள் கர்ம வினைகளை தீர்த்திடுவாயே நீ!
*அன்புதனை பொழிந்திடுவோமே சாய்
எங்களை அரவணைத்து காத்திடுவாயே நீ!
*புறங்கூறலை தவிர்த்திடுவோமே சாய்
எஙகள் புண்ணியங்களை பெருக்கிடுவாயே நீ!
*உதியே மருந்தாய் உண்டிடுவோமே சாய்
எங்களை உன்பால் ஈர்த்திடுவாயே நீ!
*அகங்காரத்தை அழித்திடுவோமே சாய்
எங்கள் ஆன்மாவினை உணர்த்திடுவாயே நீ!
*ஆரத்தியில் மகிழ்ந்திடுவோமே சாய்
எங்களை ஆதரவுடன் அணைத்திடுவாயே நீ!
*அபிஷேகத்தில் நனைந்திடுவோமே சாய்
எங்கள் ஆன்மீகத்தை உயர்த்திடுவாயே நீ!
*கனவில் உம்முடன் சஞ்சரிப்போமே சாய்
எங்களை கடமைதனை புரிந்திடச் செய்வாயே நீ!
*நித்தமும் உனை துதித்திடுவோமே சாய்
எங்கள் துயரங்களை துரத்திடுவாயே நீ!
*சிரத்தையுடன் வணங்கிடுவோமே சாய்
எங்களை ஷீரடிக்கு இழுத்திடுவாயே நீ!
*பாசத்துடன் உனை பார்த்திடுவோமே சாய்
எங்கள் பாரங்களை சுமந்திடுவாயே நீ!
*பிரம்மத்தை கற்றிடுவோமே சாய்
எங்களை எப்பிறவியிலும் தொடர்ந்திடுவாயே நீ!
*கலக்கத்துடன் உனை நாடிடுவோமே சாய்
எங்கள் கடவுளாக மாறிடுவாயே நீ!
*உங்கள் காலடி மலராக மாறிடுவோமே சாய்
எங்களை காலனிடமிருந்து காத்திடுவாயே நீ!
*சகலமும் சத்குருவே சாய்
சச்சிதானந்தப் பேரொளியாவாயே நீ!
Romba nanaa eruku. Om Sai Ram Baba.
ReplyDelete